தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தரவரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 5ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. பொறியியல் படிப்புகளில் சேர 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,86,000 மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர். கடந்த ஆண்டை விட 16,810 பேர் கூடுதலாக இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நாளை ரேண்டம் எண் வெளியிடப்படவுள்ளது. சான்றிதழ்களை ஜூன் 9ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் ஜூன் 26ம் தேதி வெளியிடப்படும் என்றும் பொது கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெறும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.