இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டைமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், இஸ்லாமியம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாண சட்டப்பேரவையும், உள்ளூராட்சி மன்றங்களும் காலாவதியாகி, தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து, சிறப்பாக செயலாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்தான் திருக்கோணமலை இயற்கை துறைமுகம் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, திருக்கோணமலை இயற்கை துறைமுகம் முக்கிய பங்கு வகித்தது. மேலும் பூகோள ரீதியாக அதிக வளம் நிறைந்த ஒரு மாகாணமாக இலங்கையின் கிழக்கு மாகாணம் திகழ்கிறது.
இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் திருக்கோணமலை இயற்கை துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை தொலைப்பேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டைமான், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. அதை நினைவூட்டும் வகையில் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.