எடப்பாடி அருகே மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, அதிகளவு மது குடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி அருகே கள்ளுக்கடை பகுதியில் அரசு மதுபானக் கடையும் அதன் அருகே மதுபான பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த பாரில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் இறந்துகிடந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பூலாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் கல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சேகர் (34) என்பது தெரியவந்தது. இவர், குடிக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும், இவருக்கு நித்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சேகர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவ்வபோது மதுபான பாரில் கூலிக்கு வேலை பார்த்து, அதில் வரும் பணத்தை வைத்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சேகருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இனி மது அருந்தக் கூடாது என்றும் உடலில் சில உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி சேகர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை கள்ளுக்கடை டாஸ்மாக் பாரில் அதிகளவு மது அருந்தியதால், அவர் மயக்கமடைந்து உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.