மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கர்தாவை சேர்ந்தவர் ஜெய்தேஷ் கோஷ். இவரது மனைவி ஷாதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், ஷாதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஜெய்தேஷ் – ஷாதி தம்பதியினர் தங்களது பெண் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜெயதேஷ்-ஷாதி தங்கள் குழந்தையை விற்று கிடைத்த ரூ.2 லட்சத்தில் புதிய ஐபோன் வாங்கியுள்ளனர். பின்னர், மீதி பணத்துடன் இருவரும் ‘ஹனிமூன்’ சென்றுள்ளனர். திஹா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று, குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை உல்லாசமாகச் செலவழித்துள்ளனர். மேலும், அவர்கள் வாங்கிய ஐபோன் மூலம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். இதையடுத்து, ஜெய்தேஷ்-ஷாதி தம்பதியை கைது செய்த போலீசார், குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண்ணையும் கைது செய்தனர்.