இந்தியா முழுவதும் தற்போது மாமன்னன் படம் தான் டிரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில் தான். மாமன்னன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது கூட இந்த அளவுக்கு கொண்டாடப்படாத பகத் பாசிலின் ரத்னவேலு கேரக்டர், தற்போது ஓடிடியில் வெளியான பின்னர் தாறுமாறாக கொண்டாடப்பட்டு வருகிறது.
படத்தின் கதைப்படி அவர் ஒரு கொடூர வில்லன். ஆனால் தற்போது அவரை ஹீரோவாக சித்தரித்து ஏராளமான மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. அவரின் மாஸ் காட்சிகளை ஒன்றிணைத்து அதன் பின்னணியில் பல்வேறு சாதியினர் தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களை ஒலிக்கவிட்டு அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். சொல்லப்போனால் ராஜ ராஜ சோழனுக்கு பின்னர் அனைத்து சாதியினரும் உரிமை கொண்டாடும் ஒரு கேரக்டராக பகத் பாசிலின் ரத்னவேலு கேரக்டர் மாறிவிட்டது.
இப்படி டிரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வரும் பகத் பாசில் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவரின் தந்தை ஒரு தரமான இயக்குனர் என்பது பலரும் அறியாத ஒன்று. அதுவும் தமிழில் அவர் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
இயக்குனர் பாசில் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் பூவே பூச்சூடவா. இப்படம் நடிகை நதியாவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாகும். அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையடுத்து பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் பாசில். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.
பின்னர் கார்த்திக்கின் வருஷம் 16, அரங்கேற்ற வேலை, கற்பூர முல்லை போன்ற படங்களும் பாசில் இயக்கியவை தான். நடிகர் விஜய்யை காதல் நாயகனாக்கிய பெருமையும் இயக்குனர் பாசிலையே சேரும். அவர் இயக்கிய காதலுக்கு மரியாதை படம் விஜய்யின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக திகழ்கிறது. இதையடுத்து விஜய்யை வைத்து இயக்கிய கண்ணுக்குள் நிலவு திரைப்படமும் ஹிட் ஆனது. இப்படி தமிழில் குறைந்த அளவிலான படங்களையே இயக்கினாலும் அவை அனைத்தும் வெற்றிப்படங்களாக கொடுத்தவர் தான் பாசில். தமிழில் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஸ்ரீகாந்த் நடித்த ஒரு நாள் ஒரு கனவு. இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன்பின் அவர் தமிழில் படங்கள் எதுவும் இயக்கவில்லை.