இந்தியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,866ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 112 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 106 பேருக்கும் குஜராத் மற்றும் டெல்லியில் தலா 64 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமாக 236 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 581 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று வரை 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், இணை நோய் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, இணை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அது கொரோனா மரணமாக கருதப்படாது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.