கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு நேற்று (04.06.2025) முதல் தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விவரங்களை கொடுக்க வேண்டும். சிறு தவறு ஏற்பட்டால் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில் மகளிரின் பெயர், ஆதார் எண், ரேஷன் அட்டை எண், மொபைல் நம்பர், வீட்டு முகவரி, அது சொந்த வீடா..? அல்லது வாடகை வீடா..? என்ற விவரம், திருமண நிலை, வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், மின் இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பித்த பின், உங்கள் விண்ணப்ப நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணைப்பை பயன்படுத்தி தெரிந்துக் கொள்ளலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா..? இல்லையா..? என்பது நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு மெசேஜாக வந்துவிடும்.
இந்நிலையில் தான், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் பெண்களின் பெயர் நீக்கப்பட உள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அண்மையில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் மூலம் பணியில் சேர்ந்த 15,000 பேரின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதில், திருமணம் ஆகாத அரசு ஊழியராக இருந்தாலும், அவர் இடம்பெற்றுள்ள ரேஷன் அட்டைகள் நீக்கப்பட உள்ளது.