நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து 1,679 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் 5,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வேண்டும் என்றும் கைகளை கிருமி நாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவசியம் இன்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இம்மாதிரியான சூழலில் கர்ப்பிணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைக்கு தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.