அமேசான் ஒரு அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் ஆகும். மேலும், இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தைகளில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதலில் ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகமாக மாறியுள்ளது. இந்நிலையில் தான், அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
இனி அமேசான் செயலி மூலம் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ரூ.5 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.5 மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக வசூல் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அமேசானில் பிரைம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.
இந்தியாவில் ஏற்கனவே ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன. தங்களுடைய செயல்பாட்டு செலவினங்களுக்கு இக்கட்டணம் வசூல் செய்வது மிகவும் முக்கியம் என இந்நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்த சூழலில் தான், அமேசான் நிறுவனமும் அதே பாணியை பின்பற்றி அனைத்து ஆர்டர்களுக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
நாம் எவ்வளவு தொகைக்கு அமேசானில் ஆர்டர் செய்தாலும், கட்டாயம் ரூ.5 செலுத்த வேண்டும். இது தொடர்பாக அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த மார்க்கெட் பிளேஸ் கட்டணம் என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை தருவதற்கு இது உதவும்” என்றும் தெரிவித்துள்ளது.