90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
நடிகை கரிஷ்மா கபூர்-சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு சமைரா, கியான் ராஜ் என இரு பிள்ளைகள் உண்டு. இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2014-ல் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்கள். ஆனால் ஜீவனாம்சம் உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கியது உச்சநீதிமன்றம். இதையடுத்து சஞ்சய் கபூர் பிரியா சச்தேவை என்பவரை மணந்தார்.
இந்தநிலையில், இங்கிலாந்தில் வசித்து வந்த சஞ்சய் கபூர், போலோ விளையாடும்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரியவந்தது. அவருக்கு வயது53. இவரது மரணத்தை நடிகரும் எழுத்தாளருமான சுஹேல் சேத் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார். அவரது பதிவில், சஞ்சய் கபூரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, ஒரு பயங்கரமான இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சோனா காம்ஸ்டார் என்று அழைக்கப்படும் சோனா பிஎல்டபிள்யூ பிரிசிஷனின் தலைவராக சஞ்சய் கபூர் இருந்தார். இந்த நிறுவனம் மின்சார வாகனங்கள் உட்பட வாகன அமைப்புகள் மற்றும் கூறுகளை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்டோ உதிரிபாகங்கள் துறையில் முன்னோடியாக இருந்த அவரது மறைந்த தந்தை சுரிந்தர் கபூரால் நிறுவப்பட்டது.
சஞ்சய் கபூரின் கடைசி ட்வீட்: இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சஞ்சய் கபூர் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானத்தில் நடந்த துயர விபத்து குறித்து ட்வீட் செய்தார். “அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து பற்றிய பயங்கரமான செய்தி. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும் என்று பதிவிட்டிருந்தார்.