அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிறபகல் புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து சரியாக 1.38 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்ததும் வெடித்து சிதறியது. தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் பயணித்த பயணிகள் தீயில் கருகினர். அகமதாபாத் அருகே உள்ள பெஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதால், அங்கு விடுதியில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளனர். தீயில் கருகி பலியானவர்கள் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று குஜராத் சுகாதாரத்துறை தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார். காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பயணி தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தின் 11 ஏ என்ற இருக்கையில் பயணித்து உயிர் பிழைத்த நபரின் பெயர் விஷ்வாஸ் குமார் ரமேஷ் ஆகும். 40 வயதான இவர் இந்திய வம்சாளியை சேர்ந்த பிரிட்டன் நபர் ஆவார்.
இந்தநிலையில், விபத்து குறித்து உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரதமர் மோடி, இன்று விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, பின்னர் மருத்துவ மையத்திற்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையின் பல மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
அகமதாபாத் சென்றடைந்த பிறகு பிரதமர் மோடி ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும் இதில் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் உள்ளனர்.