முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அண்மைக் காலங்களில் ஈ.பி.எஃப்.ஓ, உறுப்பினர் சுய விவரங்கள் திருத்தத்தை எளிதாக்குவதற்கும், பரிமாற்றக் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும், ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கும், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான முன்பணக் கோரிக்கைகளை நிறைவேற்றும் செயல்பாட்டை பயன்படுத்துவதற்கும் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் நோய், வீட்டுவசதி, திருமணம் மற்றும் கல்வி ஆகியவற்றின் கீழ் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான முன்பணம் தானியங்கி உரிமை கோரல் வசதியின் கீழ் வழங்கப்பட்டன. இதன் விளைவாக 2.34 கோடி கோரிக்கைகளுக்கு இந்த முறையின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. பரிமாற்ற உரிமை கோரல் செயல்முறையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதலாளி ஒப்புதல் தேவையை நீக்குவதன் மூலம் 15.01.2025 அன்று முதல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர் சுயவிவர திருத்தத்திற்கான ஆன்லைன் வசதி, ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர் சுயவிவர திருத்தத்திற்கு முதலாளி மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பைச் சார்ந்திருக்கும் நிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணைப்பு நீக்க வசதி, உறுப்பினர்கள் தங்கள் யு.ஏ.என். எண்ணில் இருந்து தவறான உறுப்பினர் அடையாள இணைப்பை நீக்க உதவுகிறது. இதனால் குறைகள் குறைந்துள்ளன. முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது. இந்த வசதியைப் பெறுவதன் மூலம், உறுப்பினர் பாஸ்புக் விவரங்களை பார்வையிடுதல், உறுப்பினர் சுய விவரக் குறிப்புகளை புதுப்பிப்பது, உரிமைகோரல் சமர்ப்பிப்பு போன்ற சேவைகளை உடனடியாக பெறமுடியும்.
ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதைக் குறைக்கவும், காசோலை, சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கை பதிவேற்ற வேண்டும் என்ற தேவையை ஈ.பி.எஃப்.ஓ. நீக்கியுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு விவரங்களை யு.ஏ.என். உடன் இணைப்பதற்கு முதலாளியின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் 2025 ஏப்ரல் முதல் நீக்கப்பட்டது.
Read more: ரெடி..! நாளை முதல் துணை தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!