கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை என்று கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், பாதுகாப்பு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, ஆனால் கமல்ஹாசன் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அவர் நேரடியாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் விளைவாக, கர்நாடகாவில் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு கர்நாடகா விதித்த “நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடையை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த எம். மகேஷ் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ் இருந்தபோதிலும், கர்நாடக அரசு வாய்மொழி அறிவுறுத்தல்கள் மற்றும் காவல்துறை தலையீடு மூலம் தக் லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டைத் தடுத்ததாக கூறியிருந்தார்.
மொழியியல் சிறுபான்மையினரைத் தாக்கி திரையரங்குகளை எரிக்க அழைப்பு விடுத்த தீவிரவாத சக்திகளுக்கு கர்நாடக அரசு முழுமையாக சரணடைந்துள்ளது” என்று வேலன் மனுவில் கூறியிருந்தார்.. இந்தத் தடை, சினிமா அரங்குகளுக்கு எதிராக தீ வைப்பு அச்சுறுத்தல்கள், மொழியியல் சிறுபான்மையினரைக் குறிவைத்து பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறையைத் தூண்டுதல் மற்றும் கடந்த கால தமிழ் எதிர்ப்பு கலவரங்களை மீண்டும் செய்வதற்கான ஒரு அழைப்பு உள்ளிட்ட வேண்டுமென்றே செய்யப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்திலிருந்து வருகிறது என்றும் கூறியிருந்தார்.
“இந்த மிரட்டல் ஆட்சி பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் (பிரிவு 19(1)(a)) மற்றும் எந்தவொரு தொழிலையும் மேற்கொள்வதற்கான அடிப்படை உரிமைகளை (பிரிவு 19(1)(g)) நேரடியாகவும், வெளிப்படையாகவும் மீறுவதாகும். இன்னும் தீவிரமாக, இது மாநிலத்தின் மதச்சார்பற்ற அமைப்பு மற்றும் பொது ஒழுங்கின் மீதான திட்டமிட்ட தாக்குதல்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த 13-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. வேலன், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை மீதான அரசியலமைப்பிற்கு முரணான கட்டுப்பாட்டிற்குச் சமம் என்று வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், தக்லைஃப் படத்திற்கு தடை விதித்தது தொடர்பாக கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் (உள்துறை) மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..
அந்த வகையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.. நமது வீதிகளை குண்டர்கள் கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் திரைப்படத்தை பார்க்க அனைவருக்கும் உரிமை உண்டு.. படத்தை பார்த்து மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று தெரிவித்தனர்.
கர்நாடக அரசு இதுகுறித்து முடிவு செய்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தடையில்லா சான்றிதழ் பெற்ற பின், படத்திற்கான பாதுகாப்பை மாநில அரசு தான் வழங்க வேண்டும். கர்நாடகத்தில் படத்தை திரையிடுவது தொடர்பாகவும், வெளியிட்டால் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.