காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இதை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA), அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மே 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் அவற்றை ஒட்டியுள்ள தெற்கு சூடான் போன்ற நாடுகள் “அதிக ஆபத்து மண்டலம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, அந்த நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியா வரும் பயணிகளிடம் கட்டாயமாக சுய அறிவிப்புப் படிவம் பெற வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் பயணத்திற்கு முன்பே தங்களின் உடல்நிலை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பயணத்தின் போது எபோலா அறிகுறிகள் குறித்து அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்றும் DGCA வலியுறுத்தியுள்ளது. காய்ச்சல், பலவீனம், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் தடிப்பு, இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக விமானப் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய மருத்துவப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா வந்த பிறகு 21 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்பட்டாலும், பயணிகள் உடனடியாக மருத்துவமனையை அணுகி, விமான நிலைய சுகாதார அலுவலகத்திற்கும் தகவல் அளிக்க வேண்டும் என்று SOP-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின் போது யாருக்காவது அறிகுறிகள் தென்பட்டால், அவரை மற்ற பயணிகளிடமிருந்து தனிமைப்படுத்தும் வகையில் விமானத்தின் பின்பகுதிக்கு மாற்ற வேண்டும். அந்த பயணிக்காக தனி கழிவறை ஒதுக்க வேண்டும் என்றும், அருகில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு மும்மடங்கு முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், சந்தேகிக்கப்படும் நோயாளியின் முன், பின் மற்றும் பக்கத்தில் உள்ள மூன்று வரிசை இருக்கைகள் காலியாக வைக்கப்பட வேண்டும். விமானம் தரையிறங்கிய உடனே முழுமையான கிருமி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய பயணியின் இருக்கை எண், அவருக்கு காணப்பட்ட அறிகுறிகள், அருகில் அமர்ந்திருந்த பயணிகளின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை விமான நிலைய சுகாதார அமைப்புடன் உடனடியாக பகிர வேண்டும் என DGCA தெரிவித்துள்ளது.
மேலும், விமானங்களில் முதலுதவி பெட்டிகள், PPE கருவிகள், கை சுத்திகரிப்பான்கள், உயிரியல் அபாய அகற்றல் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகள், மும்மடங்கு முகமூடிகள் போன்றவை போதுமான அளவில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ஜூன் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..?



