2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 2026 ஆம் கல்வியாண்டிலும் வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளதால் இச்செயல்பாடுகள் சார்ந்து உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள வட்டார அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மைய மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைப்பு கூட்டம் 24.06.2025 அன்று திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் வட்டார உயர் கல்வி வழிகாட்டி மையத்தில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் 24.06.2025 அன்று காலை 09.00 மணிக்குள் தங்கள் வருகையை உரிய பயிற்சி மையத்தில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு வரும்போது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (Bank Pass Book), ஒரு Passport Size புகைப்படம் மற்றும் பேருந்து / ரயில் பயணசீட்டு அசல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
எனவே, மேற்படி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த வட்டார உயர் கல்வி வழிகாட்டி மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை உரிய தேதியில் பணியில் இருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.