தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தஞ்சையில் நடந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது “ மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். நகரப்பகுதிகளில் 3768 முகாம்கள், 6232 முகாம்கள் என மொத்தம் 10000 முகாம்கள் நடத்தப்படும். இதில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும்.” என்று கூறியிருந்தார்.
அதாவது ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள், தகுதியுடைய பெண்கள் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களும், ரேஷன் கார்டு வைத்திருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ஈரான் – இஸ்ரேல் போர்.. தமிழர்களை காக்க முதலமைச்சர் உத்தரவு.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு..