கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகளில், போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி வி.ஜி. அருண் வழங்கிய தீர்ப்பில், வீட்டின் தனித்தன்மையை காவல்துறை மதிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் காவல் துறை கையேட்டில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கேரள காவல் துறையின் கையேட்டில் காணப்படும் “முறைசாரா கண்காணிப்பு” மற்றும் “கடுமையான கண்காணிப்பு” பிரிவுகளில், இரவு நேரங்களில் வீட்டுக்குள் நுழைவதற்கான சட்ட அனுமதியை வழங்கவில்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நள்ளிரவில் காவல்துறையினர் வீட்டின் கதவைத் தட்டி உள்ளே நுழைவது சட்டப்படி சரியானதல்ல எனவும், இது குடிமக்களின் தனிமை உரிமையை எதிர்க்கும் செயல் எனவும் நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கில் மனுதாரர் மீது எழுப்பப்பட்ட வழக்கும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பு, காவல்துறையின் நடவடிக்கைகள் சட்டத்தின் வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதையும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் மனித மரியாதை பாதுகாக்கப்பட வேண்டியதையும் வலியுறுத்தும் முக்கிய முடிவாகக் கருதப்படுகிறது. மேலும், இத்தீர்ப்பு, நாட்டின் பிற மாநிலங்களிலும் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என சட்டவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.