கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கு அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்துள்ளது, நாங்கள் இதை எதிர்பார்த்தோம்; திறம்படவும் எதிர்கொண்டோம். ஈரான் வீசிய 14 ஏவுகணைகளில் 13 ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன. ஒரு ஏவுகணை மட்டும் அச்சுறுத்தல் அற்ற திசையில் சென்றதால், அதனை மட்டும் விட்டுவிட்டோம். இந்தத் தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை; எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன். தாக்குதல் குறித்து, எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததற்காக, ஈரானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னறிவிப்பால்தான், எந்தவொரு உயிரும் இழக்கப்படவில்லை; யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. இப்போதும்கூட அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஈரான் தொடர முடியும். இஸ்ரேலையும் அதனைச் செய்யவே நான் ஊக்குவிப்பேன். இந்தத் தாக்குதல் விவகாரத்தில் ஈரானின் கவனத்திற்காக நன்றி.
பிராந்தியத்திற்கு அமைதியை நிலைநாட்டிய கத்தார், எமிரேட்சுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நேற்று நடந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, காயமடையவில்லை என்பதை விட கத்தார் நாட்டைச் சார்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Readmore: “மனைவி, குழந்தைகளுடன் தப்பிச்செல்லுங்கள்”!. கமனெிக்கு 12 மணிநேரம் கெடு விதித்த இஸ்ரேல்!