அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தனது சமீபத்திய உத்தரவில் “வீடு என்பது வழிபாட்டு கூடம் அல்ல; அதை அந்த வகையில் பயன்படுத்தும் முன், அரசு அனுமதி என்பது கட்டாயம். அனுமதி இல்லாமல் பொதுவழிபாட்டு கூட்டங்கள் நடத்த முடியாது.” அத்துடன், மனுதாரர் அளித்திருந்த “வழிபாடு அமைதியாக, ஒலிபெருக்கி இல்லாமல் நடத்தப்படும்” என்ற உறுதிமொழியையும் நீதிபதி நிராகரித்தார். “மனுதாரர் தன்னிச்சையாக, உரிமையாகக் கொண்டு, அனுமதி இல்லாமல் ஜெபக் கூடம் நடத்த முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
“ஒலிபெருக்கி மற்றும் மைக்ரோஃபோன் பயன்படுத்தப்படாதது மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. இந்த வழக்கின் மையக் கரு என்னவென்றால், மனுதாரர் ஒரு வீட்டை ஜெபக் கூடமாக மாற்றி, வழிபாட்டு கூட்டங்களை நடத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். வீடு என்பது தனிநபரின் சொத்து என்றாலும், அதை சமூகவழிபாட்டு இடமாக மாற்றுவதற்கு அரசு அனுமதி தேவை.
மேலும், வழிபாட்டு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்ற நிலையில், மனுதாரரின் வீட்டில் பதிக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட தாசில்தாருக்கு உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் அந்த வீட்டை ஜெபக் கூடமாக மாற்றுவதை விரும்பினால், அவர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் ஜெபக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றால், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.