சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாபட்டி.
இந்த கிராமத்தின் சிறப்புகள் பற்றி ஒருவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களால் இணையத்தில் கூமாபட்டி ட்ரெண்ட் ஆனது. “ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனி ஐலேண்டு” என ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
“தமிழ்நாட்டிலேயே ஏன்.. உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? கவலைப்படாதீங்க.. கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமிங்க இது” என நகைச்சுவை பாணியில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஒருவர்.
இந்த வீடியோக்கள் வைரலாகிய நிலையில், இன்ஸ்டா Vloggers, யூடியூப் கிரியேட்டர்கள் உள்ளிட்ட பலரும் கூமாபட்டிக்கு நேரில் சென்று காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
ரீல்ஸ்களில் காணப்படும் பசுமை வாய்ந்த பகுதிகள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. கொரோனா காலத்திலேயே இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது யாரும் இங்கு படையெடுக்க வேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கூமாபட்டிக்கு வாங்க என ரீல்ஸ் போட்ட நபர் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்தாரா என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.