முதலமைச்சரிடம் ஏன் யாரும் கூட்டணி பற்றி கேட்பதில்லை என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்..
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எங்கள் பாஜகவை பொறுத்த வரை, அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டி உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைத்திந்திய அளவிலான ஆலோசனை நடைபெறும். அதனை பொறுத்து தான் விஜய தாரணிக்கு பொறுப்பு வழங்கப்படும்.” என்று கூறினார்.
மாநில நிர்வாகிகள் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ மாநில பட்டியலை கட்சி தலைமையிடம் கொடுத்துள்ளோம்.. அதனை பரிசீலித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்..
ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.. 20% ஆசிரியர்கள் இல்லை என்பதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித்துறையை சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகின்றனர்.. ஆதி திராவிடர் பள்ளிகளுக்கே இந்த நிலை என்றால், மற்ற பள்ளிகளின் நிலை எப்படி இருக்கும்? இது தான் திராவிட மாடல் ஆட்சி..
அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ எங்கள் கூட்டணியை மட்டும் குறிவைப்பது ஏன்? திமுக கூட்டணியிலும் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஆனால் இதுகுறித்து முதலமைச்சரிடம் யாரும் கேட்பதில்லை.. ” என்று தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பேசிய அமித்ஷா, அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக போட்டியிடுகிறது, எனவே அதிமுகவில் இருந்து தான் முதல்வர் என்று கூறி ட்விஸ்ட் வைத்தார் அமித்ஷா.
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று குறிப்பிடாமல் அதிமுகவில் இருந்து வருவார் என்று அமித்ஷா கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் என்று அதிமுக வேட்பாளர் என்று அதிமுகவினர் கூறி வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.