மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்திற்கு மத்திய அரசு 99,446 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். உற்பத்தித்துறையில் இத்திட்டம் அதிக கவனம் செலுத்தும் என்று கூறிய அவர், நாட்டில் உற்பத்தியை மட்டுமல்லாமல் ஆராய்ச்சியையும் இது மேம்படுத்தும். தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டார். இத்திட்டத்தால் அமைப்புசாரா தொழில்துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.
ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக மாதம் 3,000 ரூபாய் வரையில், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும், உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நான்காம் ஆண்டு வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.