மருத்துவரை காதலித்து திருமணம் செய்த யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டெக்னாலஜி கேட்ஜெட்கள் பற்றி ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். முன்பு டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இயங்கி வந்த சுதர்சன், தற்போது ‘டெக் சூப்பர் ஸ்டார்’ என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுதர்சன் வெளியிடும் டெக் ரிவ்யூ வீடியோக்களுக்கு ஃபாலோயர்கள் அதிகம். யூடியூபில் பதிவு செய்யும் வீடியோக்கள் சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வைகளைத் தாண்டும். யூடியூபில் பிரபலமாக இருந்து வரும் சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் காவல் நிலையத்தில், சுதர்சனின் மனைவி விமலா தேவி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
விமலாதேவி, மருத்துவருக்குப் படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் அவருக்கு அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்து பெற்றொர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை வளையாபதி திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் போது விமலா தேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகையும், ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர். சுதர்சன் சொந்தமாக வீடு கட்டும் போது விமலா தேவியிடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. வீடு கட்டி புது வீட்டிற்கு குடிபோன நிலையில், வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, சுதர்சனின் பெற்றோர், மருமகளிடம் வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு கொடுக்குற? வீட்டுக்கே பத்தல.. இன்னும் 20 பவுன் நகை கொண்டு வந்தா தான் வீட்டில் வைத்திருப்போம்” என்று கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர் மிரட்டியதாக விமலாதேவி கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுதர்சன், அவரது தாயார் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் இளம்பெண் ரிதன்யா அண்மையில் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா, தற்கொலைக்கு முக்கிய காரணமாக வரதட்சணை கொடுமை மற்றும் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக பேசிய வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ் அனைவரையும் அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.