உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி,பழமுதிச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.
கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது. ஆடிக்கிருத்திகை அன்று முருகனை மனதார விரதம் இருந்து வழிபட்டால், நமது கர்ம வினைகள் நீங்கும் என்றும், வாழ்வில் உள்ள தடைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது. ஆடிக்கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நம் வாழ்வில் இருக்கும் பல தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமாக முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமாக போற்றப்படுவது கார்த்திகை நட்சத்திரம் ஆகும். முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு உரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று கார்த்திகை விரதம். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முருகப் பெருமானை வளர்த்தெடுத்ததால் சிவ பெருமான் இவர்கள் ஆறு பேரையும் சிறப்பிக்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரமாகவும், முருகனுக்குரிய விரதமாக போற்றப்படவும் வரமளித்தார். அதனால் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை வேண்டிய விரதம் இருந்தால் கார்த்திகை பெண்களின் அருளாளும், முருகப் பெருமானின் அருளாளும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிக்கிருத்திகை தினமான இன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். ஆடிக்கிருத்திகை அன்று பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மாதத்திற்கு ஒரு முறை தான் கார்த்திகை நட்சத்திரம் வரும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் விசேஷமாக ஆடி மாதத்தில் 2 கார்த்திகை நட்சத்திரங்கள் வருகின்றன. அதாவது, ஆடி 4ம் தேதியான ஜூலை 20 மற்றும் ஆடி 31ம் தேதியான ஆகஸ்ட் 16 ஆகிய இரண்டு நாட்களும் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இதனால் இரண்டில் எதை ஆடிக் கிருத்திகையாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு நாட்களுமே மிகவும் தவற விடக் கூடாத மிகவும் சிறப்புமிக்க நாட்களாகும். திருத்தணி, திருச்செந்தூர், பழனி ஆகிய தலங்களில் உள்ள முருகன் கோவிலில் ஆகஸ்ட் 16ல் தான் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜூலை 20ம் தேதி இன்று ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.
ஆடிக் கிருத்திகை, தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் கிருத்திகை விரதமாகும். அதாவது ஆடி என்பது, ஆண்டின் இரண்டாவது பாதி துவங்கும் மாதமாகும். அதனால் இந்த மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே விசேஷமானதாக சொல்லப்படுகிறது. இது தெய்வ அருளை பெறுவதற்குரிய காலமாக கருதப்படுகிறது. மற்ற மாதங்களில் விரதம் இருந்து வேண்டிக் கொள்வதை விட ஆடி மாதத்தில் விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் உடனடியாக அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளால் கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு, உலகியல் துன்பங்களில் இருந்து மட்டுமின்றி பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் இருந்தும் விடுபட்டு மோட்சத்தை அடைய முடியும்.