காற்று மாசு அதிகரிப்பிற்கும், கர்ப்பிணிகள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து, எஸ்டோனியா ஆகிய 5 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 4,286 குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.இத்தாலியின் மிலனில் செப்., 9 முதல் 13 வரை நடைபெறும் ஐரோப்பிய சுவாசக்கழக சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள ஆய்வு முடிவுகளில், பசுமையான பகுதிகளில் வாழும் பெண்கள் எடை அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின் எடைக்கும், நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், வளரும் போது, ஆஸ்துமா, சி.ஓ.பி.டி போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமுள்ளது. நுரையீரல் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, காற்று மாசை குறைப்பதுடன், நகரங்கள், கிராமங்களில் பசுமையாக வைத்திருப்பது அவசியம்.
கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் பெண்கள் வசித்த பசுமையான இடங்களை செயற்கை கோள் புகைப்படங்களை வைத்து மதிப்பிட்டனர். பசுமை இடங்களில் காடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பூங்காக்கள் அடங்கும். நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), ஓசோன், கார்பன் மற்றும் இரண்டு வகையான துகள்கள் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) ஆகிய 5 மாசுபாடுகள் பற்றிய தரவுகளையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். தாய்மார்களின் வயது, தாய்மார்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உடல்நல கோளாறு உள்ளதா என எடையை குறைக்கும் காரணிகளுடன், குழந்தைகளின் எடையை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.
அதிக அளவு காற்று மாசுபாடு, குறைந்த எடை கொண்ட குழந்தைகளுடன் தொடர்புடையது. சிறிய பி.எம் 2.5, ஒப்பீட்டளவில் பெரிய மாசு துகள்கள் பி.எம்10, நைட்ரஜன் டை ஆக்சைடு, மற்றும் கருப்பு கார்பன் ஆகியவை பிறப்பு எடையில் முறையே 56, 46, 48 மற்றும் 48 கிராம்கள் முறையே சராசரி எடையை விட குறைந்த எடையுடன் தொடர்புடையவை. பசுமையை கணக்கில் எடுத்துக் கொண்டபோது, குழந்தையின் எடையில் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பசுமையான பகுதிகளில் வாழும் தாய்மார்களுக்கு, மற்ற பகுதிகளில் வாழும் தாய்மார்களை விட, சராசரியாக 27 கிராம் அதிகமான எடையுடன் குழந்தைகள் பிறந்தன என்பது தெரியவந்துள்ளது.