கேரளாவில் மாநிலத்தில் நிஃபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நிஃபா பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. கேரளாவில் இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்.16ஆம் தேதிக்குப் பிறகு கேரள மாநிலத்தில் புதிதாக நிஃபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வைரஸ் தாக்குதலின் 2-வது அலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, மரபணு வரிசை முறை முடிவுகள் நாளை கிடைக்கும். இதற்கிடையே, மத்திய குழுக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றன.
மாநிலத்தில் கடைசியாக செப்.15ஆம் தேதி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பாலூட்டிகளில் வைரஸ் இருப்பதைக் கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.