நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக மாறி உள்ளது.. குறிப்பாக கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இந்த கைது சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது தொடர்பாக, இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, அபராதம் விதிப்பதாகவும் செய்திகள் உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், மத்திய அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகு, மீன்கள், வலைகள் பறிமுதல் செய்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.