குடிகார கணவனுடன் வாழ மறுத்த மனைவியை, மண்வெட்டியை கொண்டு, அடித்து கொடூரமான முறையில் கொலை செய்த கணவனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், லட்சுமி தம்பதியினர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் செல்வத்தின் பெற்றோர்களை தனியாக விட்டு, விட்டு தனி குடித்தனத்தில் வாழ்ந்து வந்த நிலையில், செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. ஆகவே நாள்தோறும் மது சாப்பிட்டுவிட்டு வந்து லட்சுமியை செல்வம் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
ஆகவே, கணவன், மனைவிக்கிடையில் மன வருத்தம் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தான், செல்வம் தன்னுடைய மனைவி லட்சுமியை சமாதானம் செய்து, தன்னுடன் வந்து வாழுமாறு கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும் லட்சுமி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், விரக்தி அடைந்த செல்வம், ஊரில் குடித்துவிட்டு தெரிந்துள்ளார். இதன் பிறகு பிரம்மை பிடித்ததை போல திரிந்த அவர், ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடன் வாழ மறுக்கும் மனைவி லட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இந்த நிலையில், ஒருநாள் செல்வம் தன்னுடைய மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டபடி, கூலி வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்த லட்சுமியை, இருசக்கர வாகனத்தால், இடித்து கீழே தள்ளி, அதன் பிறகு, தன்னுடைய கையில் இருந்த மண்வெட்டியை எடுத்து, கொடூரமாக அடித்து, கொலை செய்துள்ளார்.
இதன் பிறகு அவர் கொலை செய்த ஆயுதமான மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, காவல் நிலையத்திற்கு சென்று, அங்கே, தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக, தெரிவித்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் செல்வம்.