2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் தரப்பு, தவெகவுடன் இணைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேசமயம் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசியுள்ளார்.
இதனால் யாரோடு இணைய போகிறார் எனறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு ஓபிஎஸ் க்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில், ஒருதரப்பினர் பாஜகவுடன் இணையக் கூடாது என்றும், மற்றொரு தரப்பினர் தற்போதை சூழலில் பாஜகவுடன் இணைவதுதான் சரி என்றும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை ஒபிஎஸ் சந்திக்கும் சூழலில் தமிழக அரசியல் கூட்டணியில் மீண்டும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
Read more: இலவசங்கள் இல்லாத தவெக தேர்தல் அறிக்கை.. விஜய்க்கு கைக்கொடுக்குமா 2026 தேர்தல்..?