ராகுல்காந்தி கைதை கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், விஜய்யை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்
பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் பேரணி நடத்தினர்.. 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள இருந்த இந்த பேரணியில் 300 பேர் கலந்து கொண்டதால் டெல்லியில் பரபரப்பு நிலவியது.. மேலும் பேரணியில் ஈடுபட்ட ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்..
இந்த நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம்.
அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம். மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது. ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்..
இந்த நிலையில் விஜய்யின் இந்த அறிக்கையை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.. பயனர் ஒருவர் “ சினிமா டிக்கெட் விடை உயர்வுக்கு காரணம் நடிகர்கள் வாங்கும் அதிகபட்ச சம்பளம் தான். ஏன் நடிகர் விஜய் அவர்கள், அதற்காக குரல் கொடுக்கவில்லை நாம் வாங்கும் சம்பளத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று கருதி அவருடைய சம்பளத்தை குறைத்து வாங்க வேண்டியது தானே” என்று பதிவிட்டுள்ளார்..
இன்னொரு பயனர் “ பாஜக என்ற வார்த்தையே இல்லாமல் கண்டனம் தெரிவிக்கிறார் இந்த மாவீரர்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் மற்றொரு பயனர் “ ஆணவக் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கல ~ தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு குரல் கொடுக்கல.. உனக்கு எதுக்கு அண்ணா நான் ஓட்டு போடணும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
“யாரை கண்டிக்கிறேன்னு சொல்ல துப்பில்லை. யாரை கேட்டுக்கொள்கிறேன்னு சொல்லவும் வக்கில்லை. வெறும் மொட்டை கடுதாசி போல அரசியல் செய்யும் பிஜேபி பி டீம் சங்கி விஜய்.” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்..
மேலும் ஒரு பயனர் “ வாக்காளர் சேர்ப்புல அவ்வளவு முறைகேடுகள் நடந்திருக்கு அதப்பத்தி ஏதும் இல்ல.. ஒன்றிய அரசுன்னு வார்த்தையே இல்ல.. பிரதமர் மோடி, பாஜகன்னு ஏதும் இல்ல.. அவ்வளவு பயத்த வச்சிக்கிட்டு ஏண்டா அறிக்கை எழுதறீங்க தற்குறிகளா!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்..
இதே போல் பலரும் விஜய்யின் இந்த அறிக்கைக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்..