பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தில் வசித்து வருபவர், சுஷில். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் 9 வயதான அமிர்தா குமாரி, இரண்டாவது மகள் 7 வயதான சாக்ஷி மற்றும் மூன்றாவது மகள் 4 வயதான காஞ்சன். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுஷிலின் மூன்று குழந்தைகளும் காணாமல் போய்விட்டனர். ஆனால் பெற்றோர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, சுஷில் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மக்சூதன் காவல் நிலைய போலீசார் இரவு 11 மணியளவில் குழந்தைகளை தேட தொடங்கியுள்ளனர். ஆனால் குழந்தைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் எந்த பதற்றமும் இல்லாமல் இருந்ததால், போலீசாருக்கு பெற்றோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, போலீசார் வீட்டில் சோதனை செய்த போது, வீட்டில் இருந்த பெரிய ட்ரங்க் பெட்யில் மூன்று சிறுமிகளும் சடலமாக கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வறுமை காரணமாக குழந்தைகளுக்கு சரியாக உணவளிக்க முடியாததால், தங்கள் பிள்ளைகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், மகள்களுக்கு கொடுத்த பாலில் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமிகளின் உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.