சிக்கிம் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழை, பெருவெள்ளத்தில் ராணுவத்தின் ஆயுத கிடங்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் லோனாக் ஏரியில் மேகவெடிப்பால் பெருமழை கொட்டி அதன் கரை உடைந்து டீஸ்டா நதியில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 14 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், பெருவெள்ளத்தில் சிக்கிய 6 ராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 103 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
சிக்கிமில் அனைத்து பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் தற்போதைக்கு வரவேண்டாம். பயணத் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையே, டீஸ்டா நதிகரையின் ஓரத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் கரை ஒதுங்கினால் பொதுமக்கள் உடனடியாக அரசு நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதை கையில் எடுக்கக் கூடாது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், சிக்கிமில் ராணுவத்தின் ஆயுத கிடங்கும் டீஸ்டா நதி பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநில அரசு 03592-202892 ; 03592-221152; 8001763383 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், சிக்கிமில் சிக்கி தவிக்கும் 3,000 சுற்றுலா பயணிகளை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவதிலும் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.