புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் வரும் ஜன. 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், கிராம மக்களின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளவும் கடந்த 4 மாதங்களாக, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் சென்றேன். கடந்த மாதத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். கிராமங்களில் இருக்கக்கூடிய பிரச்னைகள் அதிர்ச்சி மற்றும் வேதனை அளிக்கக்கூடியதாக இருந்தன.
நெல்லை மாவட்டத்தில் தேவேந்திரகுலவேளாளர் மக்கள் வாழும் 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாக்கடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும் 40 சதவீதம் வேளாண் தொழிலில் ஈடுபடும் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பாசனவசதிக்கு வைகை நதி நீர் கொடுக்கவில்லை. தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர், அருந்ததியர், சிறுபான்மையினர் வாழும் பகுதியில் குடிநீர் வசதி செய்யவில்லை. இவர்கள் திட்டமிட்டு ஊராட்சி மன்றங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். எனவே, இந்த மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி நவ.20-ம் தேதி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.



