தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது.
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டுள்ளது.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி, அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், வீடு வீடாக அலுவலர்கள் வந்து விண்ணப்ப படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து பெறும் பணி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது.
இன்று முதல் டிச.4-ம் தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வாளர்கள். அப்போது, அனைத்து வாக்காளர்களுக்கும் பகுதியளவு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை வழங்குவார்கள். அந்த படிவத்தை வாக்காளர்கள் நிரப்ப வேண்டும். நிரப்புவதில் சிரமம் இருந்தால், நிலை அலுவலர்கள் உதவுவார்கள்.
நிரப்பிய கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை அலுவலர் வழங்குவார். இவ்வாறாக ஒரு வீட்டுக்கு வாக்குச்சாவடிநிலை அலுவலர் 3 முறை செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளையும் நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால், சமீபத்திய புகைப்படத்தை படிவத்தில் ஒட்டலாம். இந்த கணக்கெடுப்பின்போது வாக்காளரிடம் இருந்து எந்த ஒரு ஆவணமும் பெறப்படாது.
இணையதளம், செயலியிலும் வசதிமேலும், கணக்கெடுப்பு படிவத்தை இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். பகுதியளவு நிரப்பப்பட்ட படிவத்தை ‘ECINET’ என்ற செயலிமூலம் பதிவேற்ற முடியும். இல்லாவிட்டால் ‘voters.eci.gov.in’ என்ற இணையதளத்தில் கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, அதன்பின் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.



