இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக் குழுதான் என குற்றம் சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் ஒரு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் காயமடைந்தனர். டெல்லியில் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட வெடிப்பு நிகழ்ந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இந்த தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவின் சதி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாக கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை இந்திய திட்டவட்டமாக மறுத்ததுடன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் நடந்து கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு சீர்குலைவு மற்றும் அதிகார அபகரிப்பில் இருந்து சொந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்தியாவிற்கு எதிராக தவறான கதைகளை உருவாக்குவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கும், ஆப்கனிஸ்தானுக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.



