தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.15 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை பெறலாம்.
UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 45, சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர். பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்) 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர் தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடை, அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி விற்கலாம். மளிகை கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி மொபைல்/உதிரிபாகங்கள் கடை, வாகன உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் உள்ளிட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.



