குடிபோதையில் சித்தியிடம் தவறாக நடந்துகொண்ட மகனைப் பெற்ற தந்தையும், அவரின் இரண்டாவது மனைவியின் மகனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த ஜொல்லபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்குப் பிறந்தவர் சரவணன் (32), இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் கோவிந்தராஜ். ஜெய்சங்கர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்களுடன் ஒரே வீட்டில்தான் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இதில், சரவணன் படித்து முடித்தும் எந்த வேலைக்கும் செல்லாமல், தொடர்ந்து ஊர் சுற்றித் திரிந்துள்ளார். மேலும், அவர் குடிபோதைக்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் சண்டையிடுவதை பழக்கமாக வைத்திருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சரவணன், உறங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் இரண்டாவது மனைவி (சித்தி)யிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்த ஜெய்சங்கர், தனது மகனின் இந்தப் போக்கை கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இந்தக் கைகலப்பை கண்ட கோவிந்தராஜும் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனை கண்டித்துள்ளார்.
இருப்பினும், போதையில் இருந்த சரவணன் அடங்காமல், அங்கிருந்த அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கத்தியுள்ளார். மகனின் இந்தச் செயலால் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற ஜெய்சங்கரும், கோவிந்தராஜும் சேர்ந்து அங்கிருந்த செங்கல்லை எடுத்து சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை நடந்த பிறகு, ஜெய்சங்கர், அவரது இரண்டாவது மனைவி மற்றும் கோவிந்தராஜ் ஆகிய மூவரும், சரவணனின் உடலை ஒரு போர்வையில் சுற்றி வீட்டின் வெளியே வீசிவிட்டு, எதுவும் தெரியாததுபோல் படுத்து உறங்கியுள்ளனர். மறுநாள் காலையில் சரவணனின் உடலைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குடிபோதையில் தனது சித்தியிடம் மகன் தவறாக நடக்க முயன்றதால்தான், பெற்ற தந்தையே அவரை அடித்துக் கொன்றார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்ட ஜெய்சங்கர் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜொல்லபட்டி கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : FLASH | இண்டிகோ, ஏர் இந்தியா உள்பட 250 விமான சேவைகள் நிறுத்தம்..!! அதிர்ச்சியில் பயணிகள்..!!



