சென்னையில் புகார் அளிக்க வந்த இளம் பெண் பொறியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகாரைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாகப் பெண் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பெனசீர் பேகம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மென்பொருள் பொறியாளர், கனடாவில் பணியாற்றும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சென்னைக்கு வந்தபோது இருவரும் நெருங்கிப் பழகி உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது ராணிக்குப் பிறகு தெரியவந்தது.
இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில், அந்த நபர் ராணியின் தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ராணி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரித்தார்.
அப்போது அவர், புகாரில் நியாயம் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண் பொறியாளரிடம் இருந்து மளிகை மற்றும் ஆடம்பரப் பொருட்கள் உட்பட பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியுள்ளார். அதேசமயம், காதலனை கைது செய்யாமல் இருப்பதற்காக அவரிடமும் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், காதலன் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கும் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மறைமுகமாக உதவியுள்ளார். இதனால் முன்ஜாமீன் பெற்ற காதலன் கனடாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். காதலன் வெளிநாடு தப்பிச் சென்றது குறித்து நியாயம் கேட்டு பெனசீர் பேகத்திடம் ராணி சண்டையிட்டுள்ளார். சரியான பதில் கிடைக்காததால், இணை ஆணையர் தீஷா மிட்டலைச் சந்தித்து, எஸ்ஐயின் மோசடி குறித்து ஆவணங்களுடன் புகார் அளித்தார்.
அந்தப் புகாரை விசாரிக்க இணை ஆணையர் உத்தரவிட்டதன்பேரில், ராணி விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவைச் சந்தித்து புகார் அளித்தார். விசாரணை என்ற பெயரில், உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு, ராணியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அடிக்கடி நள்ளிரவில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
மேலும், விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைக்கும்போதெல்லாம் அவர் ராணியின் தோளில் கை வைத்துத் தொட்டுப் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில், “நீ அழகாக இருக்கிறாய்… நான் சொல்வதை நீ செய்தால், நீ சொல்வதை நான் செய்கிறேன்” என்று மிகவும் ஆபாசமான வகையில் உல்லாசத்திற்கு அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
உதவி ஆணையரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த ராணி, மீண்டும் இணை ஆணையர் தீஷா மிட்டலை சந்தித்து, எஸ்ஐ பெனசீர் பேகம் மீது நடவடிக்கை எடுக்கச் சென்றபோது, உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், படுக்கைக்கு அழைப்பதாகவும் அழுது புலம்பியுள்ளார்.
இதையடுத்து, ராணி அளித்த வாட்ஸ்அப் மெசேஜ் ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில், காவல் ஆணையர் அருண் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகிய இருவர் மீதும் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதேசமயம், புகார் அளித்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் லஞ்சம் பெற்ற பெண் எஸ்ஐ பெனசீர் பேகம் ஆகிய இருவரையும் ஆணையர் அருண் அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். எஸ்ஐ பெனசீர் பேகம் மீது ஏற்கனவே அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணம் பெற்றதாகப் பல புகார்கள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



