அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்சி தாவலுக்கு பின்னால், தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, பிற கட்சி நிர்வாகிகளை தவெக-வில் இணைக்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், வரும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டுமென்றால், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன், தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார். கட்சியின் உள் விவகாரங்களைப் பொதுவெளியில் பேசியதாக கூறி, முதலில் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டி, ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
தவெகவில் இணைந்த செங்கோட்டையன், தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக கூட்டணி மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவிட்டார். அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-வான சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இடையில் திமுக தலையிட்டு, சின்னசாமியைத் தங்கள் பக்கம் இழுத்து இணைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் உஷாரான செங்கோட்டையன், இதுபோல் இனி நடந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையுடன் செயல்பட தொடங்கியுள்ளார். அவர் தற்போது சென்னை, டெல்டா மற்றும் கொங்குப் பகுதிகளைச் சேர்ந்த 3 முக்கிய முன்னாள் தலைவர்களுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக தலைமைக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி “ஓடிபி” கட்டாயம்..!! ரயில்வே அதிரடி அறிவிப்பு..!!



