வெள்ளிப் பொருட்களுக்கு கட்டாய ஹெச்யுஐடி (பிரத்தியேக ஹால்மார்க் அடையாள எண்) திட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் மூன்று மாதங்களுக்குள், 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் இந்தப் பிரத்தியேக எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது நகைக்கடைக்காரர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் வலுவான வரவேற்பைப் பிரதிபலிக்கிறது.
வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் திட்டம் தன்னார்வமாக இருந்தாலும், ஹால்மார்க் செய்யப்பட்ட எந்த வெள்ளிப் பொருளுக்கும் ஹெச்யுஐடி எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஹால்மார்க் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் கிட்டத்தட்ட 90%-ல் தூய்மை தரங்கள் 925 மற்றும் 800 ஆகும். ஹெச்யுஐடி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. 2024–25 நிதியாண்டில், சுமார் 32 லட்சம் வெள்ளிப் பொருட்கள் ஹால்மார்க் செய்யப்பட்டன. இந்த எழுச்சி ஹெச்யுஐடி அமைப்புமுறையில் நுகர்வோர் மற்றும் நகைக்கடைக்காரர்களின் வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை குறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ள மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, “வெள்ளி நகை ஹால்மார்க்கிங்கில் ஹெச்யுஐடி முறை, தூய்மையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதிலும், போலி ஹால்மார்க்கிங் நடைமுறைகளை ஒழிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. தன்னார்வ ஹால்மார்க் (பிஐஎஸ்) செய்யப்பட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஹெச்யுஐடி கட்டாயமாக இருப்பதால், ஒவ்வொரு பொருளும் தனித்துவமான 6 இலக்க அடையாளக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
இது முழுமையான டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட நுகர்வோர் பாதுகாப்பை செயல்படுத்துகிறது. ஹெச்யுஐடி அமைப்புமுறையின் கீழ் ஏற்கனவே 17.35 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளதால், இந்த முயற்சி நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களிடையே அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



