நம்மில் பலருக்கு வருமான வரி விதிகள் பற்றி முழுமையான புரிதல் இல்லை. “என் பணம், என் விருப்பம்” என்ற எண்ணம் சட்டப்படி பொருந்தாது என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் அதிக அளவு ரொக்கம் வைத்திருந்தால் கூட, அதற்கு வரி விதிக்கப்படும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜா, வெளியிடப்படாத பணம் ஐடி சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டால், 84 சதவீதம் வரை வரி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
அஹுஜா கூறியதாவது, தற்போது ரொக்க பரிவர்த்தனைகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. வீட்டில் அல்லது தனிநபரிடம் உள்ள பணம் எங்கிருந்து வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அந்த நபரின் மீதே உள்ளது. அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்றால், வரி + அபராதமாக 84% வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
இப்போது வங்கிகள், பதிவு அலுவலகங்கள் மற்றும் வருமான வரித் துறை இடையே தானியங்கி தரவுப் பகிர்வு நடைமுறையில் உள்ளது. ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கம் எடுத்தால், அந்த விவரம் நேரடியாக வரித்துறைக்கு அனுப்பப்படும். ரூ.20 லட்சத்திற்கு மேல் ரொக்கம் எடுத்தால், வங்கியே TDS கழிக்கும். அடிக்கடி பெரிய ரொக்க பரிவர்த்தனைகள் செய்தால், வருமான வரித் துறை விசாரணை நடத்தலாம்.
சில ரொக்கப் பரிவர்த்தனைகள் மீது அரசாங்கம் Zero Tolerance Policy பின்பற்றுகிறது. அதாவது, எந்த விதமான தளர்வும் இல்லை. ஒரே நாளில் ஒரே நபரிடமிருந்து ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகப் பெறுதல், சொத்து வாங்கல் அல்லது விற்பனை செய்யும் போது ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகப் பெறுதல், வர்த்தக பரிவர்த்தனைகளில் சட்டவிரோதமாக ரொக்கம் பயன்படுத்துதல். இவற்றுக்கு 100% அபராதம் விதிக்கப்படும். அதாவது, பெற்ற முழுத் தொகையும் அபராதமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
கருப்புப் பணம், சட்டவிரோத வருமானம் மற்றும் கணக்கில் வராத பரிவர்த்தனைகளை முற்றிலும் ஒழிக்கவே இந்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
விதிகள் புதிதல்ல என்றாலும், வங்கிகள் – வரித்துறை – பதிவுத்துறைகள் இடையே உள்ள வலுவான தரவுப் பகிர்வு காரணமாக, விதிகளை மீறுபவர்களை எளிதில் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்களின் அறிவுரை:
- தேவையற்ற அளவில் வீட்டில் ரொக்கம் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
- அனைத்து வருமானங்களையும் முறையாக அறிவித்து, கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.
- ரொக்கத்தின் ஆதார ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
Read more: எந்த ஷா வந்தாலென்ன? திமுக தக்க பாடம் புகட்டும்..! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!



