வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகள். காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.
இம்முகாமின் முக்கிய நோக்கம். நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவுவதாகும். வங்கிகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை RBI-யின் Depositor Education and Awareness (DEA) நிதிக்கு மாற்றப்படுகின்றன.
இதனை பொதுமக்கள் தங்களது வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் அல்லது RBI-யின் UDGAM இணையதளம் (https://udgam.rbi.org.in) வழியாகவும் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளை கோரி பெறலாம். இம்முகாமில் வங்கித்துறை, காப்பீட்டு துறை, நிதித்துறை மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று, தங்களது உரிமை கோரப்படாத நிதி தொகைகளை மீட்க இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



