கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்துள்ளது. வித்யாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, ரூ.7.50 லட்சம் வரையிலான கடன்களுக்குப் பிணையப் பாதுகாப்பு தேவையில்லை. மேலும், தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு ரூ.7.50 லட்சத்திற்கும் அதிகமாகவும் பிணையில்லா கடன்களை வங்கிகள் வழங்குகின்றன.பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டம் 2024-ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டம், தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு எளிய, வெளிப்படையான முறையில் பிணையில்லா, உத்தரவாதமில்லாக் கல்விக்கடன்களை உறுதி செய்கிறது. வாராக்கடன்களைத் தீர்க்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களையும் இந்திய ரிசர்வு வங்கி வழங்கியுள்ளது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.



