மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..‌ ரூ.10 லட்சம் கொடுத்து சமரசம்.‌..! அன்புமணி குற்றச்சாட்டு

3161612 anbumaniramadoss 1

தருமபுரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் அவரின் தவறை மூடி மறைக்க கட்டப்பஞ்சாயத்து செய்த கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு அந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மணிவண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்குக் காரணமான ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து அவர் தப்பிக்க விடப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக அரசு உருவாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயின்று வரும் மாணவிகளை விளையாட்டுப் பாடவேளைக்கு பள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திடலுக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளனர். அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஊர் முக்கியப் பிரமுகர்களிடம் பேசி பிரச்சினையைத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதைத் தொடந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் குடிப்பட்டியைச் சேர்ந்த துணை நடிகர் ஒருவரின் வீட்டில் கூடி கட்டப் பஞ்சாயத்து பேசியுள்ளனர்.அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க ஆசிரியர் மணிவண்ணனிடம் ரூ.10 லட்சம் வாங்கிய கட்டப் பஞ்சாயத்து கும்பல், அதில் ரூ.6 லட்சத்தை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய ஒருவர் இந்த விவரங்களை பொதுவெளியில் தெரிவித்ததைத் தொடர்ந்து தான் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை வெளியில் தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஆசிரியர் மணிவண்ணன் இதற்கு முன் பணியாற்றிய பள்ளிகளிலும் இதே குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஆசிரியர்கள் எனப்படுபவர்கள் தாய், தந்தைக்கு அடுத்த நிலையில், கடவுளுக்கும் கூடுதலான இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை நம்பித் தான் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால், வேலிகளே பயிர்களை மேய்வதைப் போல குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் ஆகும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இன்றைய ராசி பலன் 17 டிசம்பர் 2025: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்க நகைகளை வாங்குவீர்கள்..!

Wed Dec 17 , 2025
Today's Horoscope 17 December 2025: Today, these zodiac signs will buy gold jewelry..!
zodiac yogam horoscope

You May Like