பாகிஸ்தான் ஆணுறைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைக் கோரியது, ஆனால் நிதி தொடர்பான கவலைகளைக் காரணம் காட்டி அந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
உலகிலேயே மிக வேகமாக மக்கள் தொகை அதிகரிக்கும் நாடுகளில் ஒன்றாகவும், தொடர்ந்து உயர்ந்த பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டும் வரும் பாகிஸ்தான், கருத்தடை சாதனங்கள் குறிப்பாக கான்டம் போன்றவற்றுக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் அரசின் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிராகரித்துள்ளதால், தற்போது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் கான்டம்களின் விலை குறையாது என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தி நியூஸ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கூட்டாட்சி வருவாய் வாரியம் (FBR) சமீபத்தில் கருத்தடை சாதனங்களுக்கு ஜிஎஸ்டி தளர்வு வழங்க வேண்டும் என முன்மொழிந்தது. ஆனால், இந்த நடவடிக்கைகள் வரவிருக்கும் பட்ஜெட்டில் மட்டுமே பரிசீலிக்கப்பட முடியும் என்று IMF தெளிவாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தற்போது IMF உதவி திட்டத்தின் கீழ் இருப்பதே அதற்கு காரணமாகும்.. இந்த திட்டம் வரிவிதிப்பு, அரசு செலவுகள் மற்றும் வருவாய் வசூல் தொடர்பாக கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது.
பாகிஸ்தானின் FBR வாஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, கருத்தடை சாதனங்களுக்கு ஜிஎஸ்டி தளர்வு வழங்க கோரியது.
இந்த வரி தளர்வு வழங்கப்பட்டால், அரசின் வருவாயில் 400 மில்லியன் முதல் 600 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. இந்த கோரிக்கை, பின்னர் நடைபெற்ற ஒரு காணொளி கூட்டத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃபின் சார்பில் IMF-க்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த IMF
இந்த விவகாரத்தில், நடப்பு நிதியாண்டின் நடுப்பகுதியில் வரி தளர்வுகளை வழங்க முடியாது என்று கூறி, பாகிஸ்தானின் கோரிக்கையை IMF தெளிவாக நிராகரித்துள்ளது. குறிப்பாக, திருத்தப்பட்ட வருவாய் இலக்குகளை எட்டவே பாகிஸ்தான் போராடி வரும் நிலையில், இவ்வகை வரிச்சலுகைகள் அரசின் நிதி நிலையை மேலும் பாதிக்கும் என IMF சுட்டிக்காட்டியுள்ளது.
இதனுடன், சானிட்டரி பேட்கள் மற்றும் குழந்தை டயப்பர்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் மற்றொரு முன்மொழிவையும் IMF நிராகரித்ததாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
முக்கியமாக, பாகிஸ்தானின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55 சதவீதம் என்ற அளவுக்கு அதிகமாக உள்ளது. இது உலகளவில் மிகவும் உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் பேர் மக்கள் தொகையில் கூடுவதால், மக்கள் நலத்திற்கான கொள்கை நோக்கங்கள் மற்றும் நிதி சார்ந்த முடிவுகள் இடையே பெரும் இடைவெளி இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில், 7 பில்லியன் டாலர் மதிப்பிலான IMF உதவி திட்டத்தின் கீழ், ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானுக்கு மேலும் 11 புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 18 மாதங்களில் பாகிஸ்தான் பின்பற்ற வேண்டிய IMF நிபந்தனைகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
Read More : பேய்கள் உலவும் ஆபத்தான தீவு.. இங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை.. எங்குள்ளது தெரியுமா?



