சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பிசியோதெரபி 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் பயிற்சியுடன் கூடிய வேலையில் சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த 4-வது நாளிலேயே, அந்த மருத்துவமனையின் உரிமையாளர் கார்த்திகேயன் (27), நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க செல்வோம் என்று கூறி அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் மாணவிக்குக் குளிர்பானம் வழங்கியுள்ளார். அதனைப் பருகிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவிக்குத் தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த மாணவியை கொளத்தூரில் உள்ள ஒரு விடுதிக்குக் கடத்திச் சென்ற கார்த்திகேயன், அங்கு மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நீண்ட நேரத்திற்குப் பிறகு விழித்துப் பார்த்த மாணவி, தான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விடுதியில் இருந்து தப்பி வந்த அவர், தனது சகோதரி உதவியுடன் கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணிச்சலாகப் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகேயன் அனாதை இல்லத்தில் வளர்ந்து, பிசியோதெரபி படித்து சொந்தமாக மருத்துவமனை தொடங்கியவர் என்பது தெரியவந்தது. அவருக்குப் பேராசிரியையாகப் பணியாற்றும் மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். “ஒரு வேகத்தில் தவறு செய்துவிட்டேன்” என்று அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், பெண் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கார்த்திகேயனை புழல் சிறையில் அடைத்தனர்.



