மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. பலவீனமான போர் நிறுத்தம் நிலவிய சூழ்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு திடீரென மோசமடைந்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே, ஈரான் கொடி ஏற்றப்பட்ட “டூஸ்கா” என்ற வர்த்தகக் கப்பலை அமெரிக்க கடற்படையினர் இடைமறித்து கைப்பற்றினர். அமெரிக்க தரப்பின் விளக்கப்படி, அந்தக் கப்பல் கடற்படை கட்டுப்பாடுகளை மீற முயன்றதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் கடற்படையினர் கப்பலில் ஏறினர். தற்போது அது முழுமையாக அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக அந்தக் கப்பல் முன்பே தடை செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே, ஓமான் கடல் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் கைப்பற்றலுக்கான நேரடி பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தாக்குதலின் அளவு, பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களின் எண்ணிக்கை அல்லது சேத விவரங்கள் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகமான கதம் அல்-அன்பியா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்கா இரண்டு வார போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், இந்த நடவடிக்கையை “ஆயுதமேந்திய கடற்கொள்ளை” என விமர்சித்துள்ளது.
மேலும், கப்பலில் ஏறுவதற்கு முன் அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அதன் வழிசெலுத்தல் அமைப்பை செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு விரைவில் வலுவான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம், சர்வதேச வர்த்தகம் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Read more: இட்லி, தோசை பிரியர்களே கவனம்… கோடையில் புளித்த உணவுகள் ஆபத்தா? FSSAI முக்கிய எச்சரிக்கை!



