திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சுரேஷ்குமார், 7 மாத கால தொடர் விசாரணைக்குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். மேலும், மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் நடந்த 7 மாதங்களுக்குள்ளேயே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே, இத்தகைய கொடூர இழிசெயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத மிகப் பெரிய கொடூரக் குற்றமாகும். இந்தக் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.



