விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண் அலி பாத்திமா(42). இவரது கணவர் முபாரக் அலி பத்து வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.11 லட்சம் பாத்திமாவுக்கு கிடைத்துள்ளது. கணவர் இறந்த பிறகு, தனது மகள் பர்வீன் (16), மகன் செய்யது பாரூக் (13), மாமியார் சிக்கந்தர் பீவி (65) ஆகியோருடன் பாத்திமா வாழ்ந்து வந்தார்.
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அக்பர் அலி(45) என்பவரை பாத்திமா 2வது திருமணம் செய்து கொண்டார். முதலில் நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை நாளடைவில் சோகத்தில் முடிந்தது. அக்பர்அலியின் முழு எண்ணமும், பாத்திமாவின் இன்சூரன்ஸ் பணத்தின் மீதே இருந்தது. பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஒரு கட்டத்தில் அக்பர் அலி பாத்திமாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் பொறுமையிழந்த பாத்திமா சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அக்பர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதனால் பாத்திமா மீது கடும் கோபத்தில் இருந்த அக்பர் அலி ஜாமீனில் வெளியே வந்த பிறகு எப்படியாவது பாத்திமாவை பழிவாங்க வேண்டும் என்றும் காத்திருந்தார். அதன்படி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று காலை பாத்திமா வீட்டிற்குள் பெட்ரோல் கேனுடன் நுழைந்து, அங்கே தூங்கி கொண்டிருந்த பாத்திமா, 2 பிள்ளைகள், மாமியார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அடுத்த நிமிடமே தீயில் பற்றி மொத்த பேரும் அலறி துடித்தனர். அக்பர் அலிக்கும் உடலில் தீக்காயம் பட்டுவிட்டது. ஆடைகளை களைந்து வீசி, சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிச்சென்று சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இதில், பாத்திமாவும், அவரது 13 வயது மகன் மற்றும் அவரது மாமியார் சிக்கந்தர் பீவியும் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்த அக்பர் அலியும் உயிரிழந்தார். படுகாயமடைந்த 16 வயது சிறுமி பர்வீன் மட்டும் 35 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



