அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தியாவின் எரிசக்தி மற்றும் வர்த்தக கொள்கைகள் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், இந்திய பொருட்களுக்கான சுங்க வரிகளை மிக விரைவாக உயர்த்தலாம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை, வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு ஆடியோ பதிவில் வெளிப்பட்டுள்ளது. அதில், ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் விஷயத்தையும் டிரம்ப் நேரடியாக குறிப்பிட்டு, அதில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் “அவர்கள் என்னை மகிழ்விப்பதற்காக தங்களது அணுகுமுறையை மாற்றினர். என்னை சந்தோஷப்படுத்தவே அவர்கள் முயன்றனர்,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசிய அவர் “ மோடி ஒரு நல்ல மனிதர். நான் சந்தோஷமாக இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். என்னை மகிழ்விப்பது முக்கியம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வர்த்தகத்தில் விளைவுகள் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். “அவர்கள் எங்களுடன் வர்த்தகம் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சுங்க வரிகளை மிக விரைவாக உயர்த்தலாம். அது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்,” என்று கூறினார்..
பிற நாடுகள் குறித்தும் விமர்சனம்
இந்தியாவை மட்டும் அல்லாமல், உலக பொருளாதார நிலை குறித்தும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். “ரஷ்ய பொருளாதாரம் மோசமாக உள்ளது. ஆனால் அதைவிட மோசமானது வெனிசுவேலாவின் பொருளாதாரம். நான் இதுவரை பார்த்த மிக மோசமான பொருளாதாரம் அது,” என்று கூறினார்.
இந்தியா–அமெரிக்கா உறவுகளில் புதிய அழுத்தம்
ட்ரம்பின் இந்த கருத்து இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..
ஒருபுறம் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில், ட்ரம்ப் கூறிய இந்தக் கருத்துகள், இந்தியாவின் சமநிலைப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
Read More : மக்களின் பாக்கெட்டுகளை காலி செய்யும் வென்டிலேட்டர் மாஃபியாவிற்கு ஆப்பு..! மத்திய அரசின் புதிய விதிகள்..!



